TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30-06-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30-06-2026
விளையாட்டுச் செய்திகள்
300 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த கெமர் ரோச்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெமர் ரோச், ஆன்டிகுவாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 300-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டினார். போட்டியின் நான்காவது நாளில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தனது 35-ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். நியூசிலாந்தில் பிறந்த அவர், இங்கிலாந்து அணிக்காக விளையாடி 122 டெஸ்ட் போட்டிகளில் 7,273 ரன்கள் மற்றும் 252 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவரது டெஸ்ட் பேட்டிங் சாதனையில் 14 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் இடம்பெற்றுள்ளன; சிறந்த பந்துவீச்சு 6/22 ஆகும். 2019 ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும், 2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்தார். 2016 ஐசிசி உலக டி20 இறுதிப்போட்டியில், ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கார்லோஸ் பிராத்வெயிட் அவரது ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
கிரிக்கெட், 1900-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு 128 ஆண்டுகள் கழித்து 2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. போட்டிகள் டி20 வடிவத்தில் நடைபெறவுள்ளன. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்ட தகுதி விதிகளின்படி, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களின் முன்னணி அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை மகளிர் பிரிவில் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடம், அமெரிக்கா டிசம்பர் 31-க்குள் ICC தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் வந்தால் அதற்கு வழங்கப்படும்; இல்லையெனில் தகுதி பெறாத அணிகளில் உயர்ந்த தரவரிசை பெற்ற அணிக்கு வழங்கப்படும். மற்றொரு இடம் உலகளாவிய தகுதிச்சுற்று மூலம் நிர்ணயிக்கப்படும். ஆடவர் பிரிவிற்கான தகுதியும் இதே முறையில் தீர்மானிக்கப்படும்.
சர்வதேசச் செய்திகள்
கத்தாரில் முடக்கப்பட்ட ஈரான் சொத்துகள் குறித்து அறிவிப்பு
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், கத்தாரில் முடக்கப்பட்டுள்ள 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துகளில் 6 பில்லியன் அமெரிக்க டாலர் இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகள் மீதான தடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனினும், அமெரிக்கா இதுவரை எந்த முடக்கப்பட்ட சொத்துகளும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது; கத்தார் தரப்பும் இதை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலால், ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஈரான், ஓமன் கடற்பகுதிக்கு அருகிலுள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளை இலக்காகக் கொண்டு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டது.
நாகரோ எஸ்இ நிறுவனத்தை கையகப்படுத்தும் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த நாகரோ எஸ்இ (Nagarro SE) நிறுவனத்தின் 100% பங்குகளையும் கையகப்படுத்த முன்வந்துள்ளது. பெர்சிஸ்டன்ட் நிறுவனம் ஏற்கனவே 21% பங்குகளை கையகப்படுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள அனைத்து பங்குகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இது இந்திய ஐடி நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக அமையும். இணைந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி, 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 46,000 ஊழியர்களுடன் செயல்படும். நாகரோ எஸ்இ நிறுவனத்தின் இயக்குநர் குழு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும், 50%-க்கும் அதிகமான பங்குதாரர்களின் ஒப்புதல் கிடைத்த பின்னரே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 11%-க்கும் மேல் சரிந்து, 52 வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவை எட்டியது.
பிரதமர் மோடியின் செஷல்ஸ் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ் நாட்டிற்கு மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, விக்டோரியா நகரில் இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அவர் அருள்மிகு நவசக்தி விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தி, அமைதிப் பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, அந்நாட்டின் 50-ஆவது தேசிய தினம் மற்றும் 50-ஆவது சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இப்பயணத்தின் போது, செஷல்ஸ் நாட்டின் உயரிய விருதான "Guardian of the Blue Horizon" விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு, எண்ம பணப் பரிவர்த்தனை, விண்வெளி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய முடிவுகள் இந்தியா மற்றும் செஷல்ஸ் இடையே எட்டப்பட்டன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தப் பயணத்தை இந்தியா–செஷல்ஸ் இருதரப்பு உறவின் முக்கிய மைல்கல் எனக் குறிப்பிட்டார்.
தேசியச் செய்திகள்
என்ஐஐஎஃப்-க்கு ₹30,000 கோடி கூடுதல் முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை, தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் (NIIF) அமைப்பில் ₹30,000 கோடி கூடுதல் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசின் NIIF அமைப்புக்கான மொத்த முதலீட்டு உறுதிப்பாடு ₹60,000 கோடியாக உயரும். NIIF என்பது இந்தியாவின் இறையாண்மை சார்ந்த நிதியம் (Sovereign Anchored Fund) ஆகும். இதில் இந்திய அரசு 49% பங்குகளை கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் சுமார் ₹40,000 கோடி மூலதனப் பொறுப்புகளை நிர்வகித்து வருகிறது. இந்த கூடுதல் முதலீடு NIIF Infrastructure Fund II என்ற இரண்டாவது உள்கட்டமைப்பு சார்ந்த நிதியை உருவாக்க பயன்படுத்தப்படும். இதன் இலக்கு மூலதனம் ₹30,000 கோடி ஆகும். இந்த நிதி போக்குவரத்து, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனப் போக்குவரத்து (e-mobility) உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யும். மேலும், இந்த ஒதுக்கீடு NIIF-இன் புதிய நிதி உத்திகள் மற்றும் வரவிருக்கும் இருதரப்பு மற்றும் மூலோபாய நிதிகளுக்கும் ஆதரவளிக்கும்.
டெல்லி புதிய மின்சார வாகனக் கொள்கை
டெல்லி அரசு, ₹7,000 கோடி பட்ஜெட் மற்றும் ₹15,000 கோடி மொத்த முதலீட்டுடன் புதிய மின்சார வாகன (EV) கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இக்கொள்கை ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வந்து மார்ச் 31, 2030 வரை நடைமுறையில் இருக்கும். இதன்படி ஜனவரி 1, 2027 முதல் மின்சார முச்சக்கர வாகனங்கள் மற்றும் N1 வகை லாரிகள் மட்டுமே பதிவு செய்யப்படும். ஏப்ரல் 1, 2028 முதல் அனைத்து இருசக்கர வாகனங்களும் கட்டாயமாக மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும். பள்ளி பேருந்துகள், கொள்கை அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் தங்களது வாகனங்களில் குறைந்தது 10%-ஐ மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும். டெல்லி டிரான்ஸ்கோ லிமிடெட் (DTL), இக்கொள்கையை செயல்படுத்தும் முதன்மை அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் 32,000 சார்ஜிங் புள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு PM e-Drive திட்டம் மற்றும் டெல்லி அரசின் நிதி பயன்படுத்தப்படும். மேலும், மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டண விலக்கு, கொள்முதல் மற்றும் ஸ்கிராப்பிங் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன. ஹைப்ரிட் வாகனங்களுக்கு எந்த மானியமும் வழங்கப்படாது. மானியங்கள் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) முறையில் வழங்கப்படும்.
பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்
மத்திய அரசு, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. இதன் மூலம், ஒரு நுகர்வோருக்கு தினசரி விதிக்கப்பட்டிருந்த 200 லிட்டர் டீசல் விற்பனை வரம்பு நீக்கப்பட்டதுடன், தொழில்துறை நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து எரிபொருள் வாங்குவதற்கான கட்டுப்பாடும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூன் 12 அன்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம், டீசல் கறுப்புச் சந்தை விற்பனை, மடைமாற்றம் மற்றும் பதுக்கலை தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்தது. தொடர்ந்து, ஜூன் 25 அன்று தொழில்துறை மற்றும் வணிக பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) விநியோகம் பழைய நிலைக்கு மீட்டமைக்கப்பட்டதுடன், துறைவாரியான விநியோகக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. தற்போதைய நடவடிக்கை, நாட்டில் எரிபொருள் விநியோக நிலைமை சீரடைந்ததை பிரதிபலிக்கிறது.
இ-சுஷ்ருத் கிளினிக் மற்றும் புதிய சுகாதார முன்முயற்சிகள்
மத்திய அரசு, சிறிய மருத்துவ மையங்களுக்காக 'இ-சுஷ்ருத் கிளினிக்' (e-Sushrut Clinic) என்ற மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அறிமுகப்படுத்தினார். இந்த மென்பொருளை மேம்பட்ட கணினி பயன்பாடு மேம்படுத்துதலுக்கான மையம் (C-DAC) உருவாக்கியுள்ளது. நோயாளிகள் பதிவு, கட்டண வசூல், மேலாண்மை தகவல் அறிக்கைகள், பேச்சை உரையாக மாற்றுதல் மற்றும் மருத்துவ முடிவெடுப்புக்கான ஆதரவு உள்ளிட்ட சேவைகளை இது தானியங்கிமயமாக்குகிறது. தேசிய சுகாதார ஆணையம் (NHA) மற்றும் C-DAC இணைந்து வழங்கும் மானியத்தின் மூலம் இந்த மென்பொருள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதுடன், முதல் மூன்று மாதங்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இதே நிகழ்ச்சியில், ஆரோக்கிய சேது செயலி தனிநபர் மருத்துவப் பதிவுகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கான எண்மத் தளமாக புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கம் (ABDM) கீழ் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேடல் வலைதளம் (UHI) அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்பநல மத்திய கவுன்சிலின் 16-ஆவது மாநாட்டில், தேசிய ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ்களும் AIS-125 தரநிலையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
பொருளாதாரச் செய்திகள்
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 5.1%
மே 2026-இல் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) 5.1% வளர்ச்சியைப் பதிவு செய்து, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு தயாரிப்பு, மின்சாரம், மூலதனப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளின் வலுவான செயல்பாடுகள் காரணமாக இருந்தன. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), IIP குறியீட்டின் அடிப்படை ஆண்டை 2022–23 ஆக மாற்றி, புதிய தரவு ஆதாரங்களையும் இணைத்து திருத்தியமைத்துள்ளது. மேலும், மொத்த விலை குறியீடு (WPI) அடிப்படையிலான கணக்கீட்டிற்கு பதிலாக உற்பத்தியாளர் விலை குறியீடு (PPI) பயன்படுத்தப்படும் என்றும், 2026 ஜூன் 1 அன்று வெளியிடப்பட்ட WPI அடிப்படையிலான IIP 2022–23 தொடர் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2026-இல் தயாரிப்புத் துறை 5.5%, மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத் துறை 9.9% வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், சுரங்கம் மற்றும் குவாரித் துறை 1.6% சரிவைச் சந்தித்து தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்தது.
மெர்ச்சன்ட் பேங்கிங் உரிமத்திற்கு ஜெரோதா விண்ணப்பம்
ஜெரோதா, இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI)-இடம் மெர்ச்சன்ட் பேங்கிங் (Merchant Banking) உரிமம் கோரி, தனது துணை நிறுவனமான ஜெரோதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் மூலம் ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் தற்போது SEBI பரிசீலனையில் உள்ளது. உரிமம் வழங்கப்பட்டால், ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடுகள் (IPO) நிர்வகித்தல் மற்றும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுதல் தொடர்பான ஆலோசனைச் சேவைகள் வழங்கும் அதிகாரம் ஜெரோதாவுக்கு கிடைக்கும். தற்போது 1.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜெரோதா, ஜெரோதா ஏஎம்சி (Zerodha AMC) மூலம் பரஸ்பர நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில், SEBI மெர்ச்சன்ட் பேங்கர்களுக்கான விதிமுறைகளை திருத்தியதைத் தொடர்ந்து, மேலும் 12 நிறுவனங்களும் மெர்ச்சன்ட் பேங்கிங் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளன.
மாநிலச் செய்திகள்
1994 யமுனை நதி ஒப்பந்தம் அமலாக்கம்
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், 1994-ஆம் ஆண்டு மேல் யமுனை நதி வாரிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹரியானா மாநிலத்தின் யமுனாநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹாத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து, மழைக்காலங்களில் நிலத்தடி குழாய் அமைப்பின் மூலம் ராஜஸ்தானுக்கு உரிய யமுனை நதிநீர் பங்கு வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய நீர் ஆணையம் (CWC) இணைந்து தயாரித்துள்ளன. இந்நிகழ்வில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல், ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி, மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
யமுனை நதி, வட இந்தியாவின் உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் வழியாகப் பாய்கிறது. இது உத்தரகாண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பனிப்பாறையில் தோன்றி, சுமார் 1,376 கி.மீ. தூரம் பாய்ந்து, உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை நதியுடன் கலக்கிறது.
மேற்கு வங்க ஒபிசி இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள்
மேற்கு வங்க சட்டப்பேரவை, மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2026 மற்றும் மேற்கு வங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம், 1993-ஐ திருத்தும் மற்றொரு மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாக்களின் மூலம், 2010 முதல் 2012 வரை முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் (TMC) அரசால் ஒபிசி பட்டியலில் சேர்க்கப்பட்ட 113 சமூகப் பிரிவுகள் நீக்கப்பட்டு, 2010-க்கு முன் இருந்த 66 சமூகப் பிரிவுகள் மட்டும் ஒபிசி பட்டியலில் தக்கவைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தின் ஒபிசி இடஒதுக்கீடு 17% இலிருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2024 மே மாதத்தில், கொல்கத்தா உயர்நீதிமன்றம், ஒபிசி பட்டியலில் சேர்க்கப்பட்ட 113 சமூகப் பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டையும், 2010-க்குப் பிறகு வழங்கப்பட்ட 12 லட்சம் ஒபிசி சான்றிதழ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த மசோதாக்களை பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரிசங்கர் கோஷ் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.
காவல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் – சென்னை ஐஐடி ஆய்வு
சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், காவல் துறையில் பெண் காவல் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது பாலின அடிப்படையிலான குற்றங்கள் தொடர்பான புகாரளிப்பை மேம்படுத்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் பிரதீப் வி. பிலிப், பேராசிரியர் தக்ஷினார் தருமராஜன், டாக்டர் திலீப் குமார் ராவ், மற்றும் எஸ். தேஜஸ்வினி ஆகியோர் மேற்கொண்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது தொடர்பான இந்த ஆய்வு Systemic Research and Development Society என்ற சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது. காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPR&D) வெளியிட்ட 2022-ஆம் ஆண்டு தரவின்படி, இந்தியாவின் மொத்த காவல் படையில் பெண்களின் பங்கு 11.75% மட்டுமே உள்ளது. காவல் துறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பெண் அதிகாரிகளுக்கு தலைமைத்துவ வாய்ப்புகள், சிறப்புப் பயிற்சி, நிறுவன ஆதரவு மற்றும் பொறுப்பு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஆய்வு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு செய்திகள்
புதிய பள்ளிக் கல்வி பாடத்திட்ட வடிவமைப்புக் குழு
தமிழக அரசு, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பள்ளிப் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை பள்ளிக் கல்வித் துறை செயலர் பி. சந்திரமோகன் வெளியிட்டுள்ளார். குழுவில் 14 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான், மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சுதந்திரமுத்து ஆகியோர் அடங்குவர். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) இயக்குநர் குழுவின் உறுப்பினர்-செயலராக செயல்படுவார். குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். தற்போது 1 முதல் 3ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், புதிய குழு 4ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை புதிய பாடத்திட்டத்தைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கும்; அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-07-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-06-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026