TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தின் முதல் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற அரசு தொடக்கப் பள்ளி
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தமிழகத்தில் முதல்முறையாக ஐஎஸ்ஓ (ISO) தரச்சான்று பெற்ற அரசு தொடக்கப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வகுப்பறை உள்கட்டமைப்பு, கற்பித்தல் முறைகள், டிஜிட்டல் நூலகம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சிசிடிவி கண்காணிப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் பள்ளித் தூய்மை ஆகிய அம்சங்களை ஆய்வு செய்த பின்னர் ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கும் குழு இந்தச் சான்றிதழை வழங்கியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி தலைமையில் பள்ளி செயல்பட்டு வருகிறது. முன்னாள் மாணவர் சந்திரசேகர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்றுக்கு விண்ணப்பித்தது, மேலும் மூன்று கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு தரச்சான்று வழங்கப்பட்டது.
சாக்கடை மற்றும் செப்டிக் டாங்கி சுத்தம் செய்யும் உயிரிழப்புகளில் தமிழ்நாடு 3-வது இடம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, நாடாளுமன்றத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சாக்கடை மற்றும் செப்டிக் டாங்கி சுத்தம் செய்யும் பணியின்போது தமிழ்நாட்டில் 38 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து. ரவிகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலாக வழங்கப்பட்டது. மாநில வாரியான தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 332 பேர் செப்டிக் டாங்கி சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா 58 உயிரிழப்புகளுடன் முதலிடத்திலும், ஹரியானா 47 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 38 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
2025–26-இல் தமிழ்நாட்டின் சரக்கு ஏற்றுமதி US$58.95 பில்லியனாக உயர்வு
தமிழ்நாடு, 2023–24 முதல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக திகழ்கிறது. 2025–26 நிதியாண்டில் மாநிலத்தின் சரக்கு ஏற்றுமதி US$58.95 பில்லியன் ஆக இருந்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கிய தகவலின்படி, 2025–26-இல் இந்தியாவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் கார்கள் ஏற்றுமதியில் 33.38%, ஜவுளி மற்றும் அதுசார்ந்த பொருட்களில் 23.13%, மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் 41.63%, தோல் மற்றும் தோல் பொருட்களில் 35.59%, பொறியியல் பொருட்களில் 16.66% பங்களிப்பை தமிழ்நாடு வழங்கியுள்ளது. மாநிலத்தின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி பங்கு 2023–24-இல் 32.84%, 2024–25-இல் 38%, 2025–26-இல் 41.63% ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் சரக்கு ஏற்றுமதி மதிப்பு 2023–24-இல் US$43.22 பில்லியன், 2024–25-இல் US$51.83 பில்லியன், 2025–26-இல் US$58.95 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி உள்கட்டமைப்பை வலுப்படுத்த, 2014–15 முதல் 2025–26 வரை தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ₹12,523 கோடி முதலீட்டில் 94 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-இல் தாக்கல்
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட், நிதியமைச்சர் என். மேரி வில்சன் மூலம் ஆகஸ்ட் 5, 2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2026–27 நிதியாண்டிற்காக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், ஆகஸ்ட் 6, 2026 அன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அலுவல் ஆய்வுக் குழு (Business Advisory Committee), ஆகஸ்ட் 5 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடரின் அட்டவணையை முடிவு செய்யும். பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவை விதிகள் 291 மற்றும் 292 சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கான நடைமுறைகளை வரையறுப்பதாகவும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்கப்பட்டால், அதுகுறித்து பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் முறைப்படி அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக வி. சிவா நியமனம்
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) தலைவராக வி. சிவாவை நியமித்துள்ளது. முன்னாள் தலைவர் பூச்சி எஸ். முருகன் மே 5 அன்று பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை மூலம் இந்த நியமனம் செய்யப்பட்டது. வி. சிவா, த.வெ.க. (TVK) வட சென்னை மாவட்டச் செயலாளர் ஆவார். மேலும், அவர் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் கட்சிப் பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
பொது சிவில் சட்ட (Uniform Civil Code - UCC) மசோதா, ஜூலை 21 அன்று மத்திய பிரதேச சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல் தொடர்பாக அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான நடைமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. அனைத்து திருமணங்கள், விவாகரத்துகள் மற்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் (Live-in Relationship) உறவுகளைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு இந்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் இந்த மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் கோவா, அஸ்ஸாம், உத்தரகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய நான்காவது மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது.
கேரள வக்பு வாரியத்தை மாநில அரசின் கண்காணிப்பிலிருந்து விடுவித்த உச்ச நீதிமன்றம்
இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்றம், கேரள வக்பு வாரியம் மாநில அரசின் இணை/கூடுதல் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் செயல்பட வேண்டும் என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவு, ஜூலை 15 அன்று பிறப்பிக்கப்பட்ட கேரள உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து வக்பு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்தபோது வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் வளர்ச்சி (UMEED) சட்டம், 2025-ன்படி, வக்பு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மற்றும் ஒரு ஷியா உறுப்பினர் இடம்பெற வேண்டும். உச்ச நீதிமன்றம், மாநில அரசின் இணை/கூடுதல் செயலாளர் வக்பு வாரியத்தின் பதவிவழி (Ex-officio) உறுப்பினராக மட்டும் தொடர அனுமதித்தது.
தேசியச் செய்திகள்
நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 288.58 ஜிகாவாட்டாக உயர்வு
மத்திய அரசு, மாநிலங்களவையில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 2014-ஆம் ஆண்டின் 76.38 ஜிகாவாட்டில் இருந்து 2026 ஜூன் நிலவரப்படி 288.58 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், எழுத்துப்பூர்வ பதிலில், இதில் 162.15 ஜிகாவாட் சூரிய மின்சக்தி, 57.44 ஜிகாவாட் காற்றாலை மின்சக்தி, 11.75 ஜிகாவாட் உயிரி மின்சக்தி, 57.24 ஜிகாவாட் நீர்மின்சக்தி அடங்குவதாகக் குறிப்பிட்டார். 2026 ஜூன் 30 நிலவரப்படி, நாட்டின் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன் 297.36 ஜிகாவாட் ஆக உள்ளது. இதில் 288.58 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் 8.78 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி திறன் அடங்கும். 2014 முதல் 2025-26 நிதியாண்டு வரை, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை 45.72 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹4.40 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டில் கடன்-ஜிடிபி விகிதம் 58.2% ஆகக் குறைந்தது
மத்திய அரசு, மாநிலங்களவையில், 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடன்-ஜிடிபி (Debt-to-GDP) விகிதம் 58.2% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவித்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் 58.5%-ஐ விடக் குறைவாகும். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி, 2026 மார்ச் 31 நிலவரப்படி மத்திய அரசின் மொத்தக் கடன் ₹201.17 லட்சம் கோடி (தற்காலிக மதிப்பீடு) எனத் தெரிவித்தார். வருவாய் வரவுகளுக்கு கடன் சேவை (வட்டி செலுத்துதல்) விகிதம் 2020-21-இல் 41.6%-லிருந்து 2025-26-இல் 37.6% ஆகக் குறைந்துள்ளது. 2026-27 மத்திய பட்ஜெட்டில், ₹17.15 லட்சம் கோடி பயனுள்ள மூலதனச் செலவு, ₹16.96 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 முதல் 2026 நிதியாண்டு வரை ₹44.03 லட்சம் கோடி மூலதனச் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டம், பிரதமரின் கதி சக்தித் திட்டம் (PM Gati Shakti), தேசிய தளவாடங்கள் கொள்கை (National Logistics Policy) மற்றும் PM Gati Shakti National Master Plan Portal ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இணையக் குற்றத் தடுப்பை வலுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கைகள்
மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார், மக்களவையில், இந்திய இணையக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் (I4C) மூலம் மேவாத், ஜம்தாரா, அகமதாபாத், ஹைதராபாத், சண்டீகர், விசாகப்பட்டினம் மற்றும் குவாஹாட்டி ஆகிய 7 நகரங்களில் கூட்டு இணைய ஒருங்கிணைப்புக் குழுக்கள் (JCCT) அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். I4C, இணையக் குற்றத் தரவுகளைப் பகிர்வு, பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை செய்வதற்காக 'சமன்வயா (Samanvaya)' என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 29,837 இணையக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2.33 லட்சம் புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை தேசிய இணையக் குற்ற புகார் வலைதளம் (NCRP) மற்றும் குடிமக்கள் நிதி இணைய மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு (CFCFRMS) மூலம் பெறப்பட்ட 32.80 லட்சம் புகார்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ₹11,158 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது. 2021–2025 காலகட்டத்தில் ₹55,050 கோடி மதிப்பிலான நிதி மோசடி தொடர்பாக 65.89 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, 1.95 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையக் குற்ற விசாரணையை வலுப்படுத்த 'சை டிரையின் (CyTrain)' கற்றல் தளம் உருவாக்கப்பட்டு, அதில் 1.63 லட்சம் காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதுடன், 1.61 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவுகளின்படி, இணையக் குற்ற புகார்கள் 2020-இல் 50,035 இருந்து 2024-இல் 1.01 லட்சமாக உயர்ந்துள்ளன.
பிஎல்ஐ திட்டங்கள் மூலம் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி உயர்வு
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, மக்களவையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டங்கள் மூலம் மார்ச் 2026 வரை ₹2.60 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 14.15 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ₹15.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட ஏற்றுமதி சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். அதிக முதலீடு உயர் திறன் கொண்ட சூரிய ஒளிமின்னழுத்த (High-Efficiency Solar PV Modules) உற்பத்தித் துறையில் ₹64,873 கோடி, அதனைத் தொடர்ந்து மருந்துத் துறை ₹45,158 கோடி, வாகனத் துறை ₹44,326 கோடி, மதிப்பு கூட்டப்பட்ட எஃகு (Specialty Steel) ₹23,896 கோடி, மற்றும் பெரிய அளவிலான மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறை ₹20,580 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளன. ₹945 கோடி மதிப்பிலான புத்தொழில் நிறுவன ஆதரவு திட்டத்தின் கீழ், 219 ஆரம்பநிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு ₹650 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் US$15.9 பில்லியன் முதலீடு செய்துள்ளன. அந்நிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையின்படி, ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 100% FDI தானியங்கி வழியில் அனுமதிக்கப்படுகிறது; பன்முக பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 51% FDI அனுமதிக்கப்படுகிறது. ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2026 வரை, ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் US$1,528.66 மில்லியன் மற்றும் பன்முக பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் US$34.38 மில்லியன் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.
காவேரி தெரபியூட்டிக்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு புற்றுநோய் திட்டங்களின் உரிமம் வழங்கிய லூபின்
சர்வதேச மருந்து நிறுவனமான லூபின் (Lupin), தனது இரண்டு புற்றுநோய் (Oncology) திட்டங்களான LNP7457 (PRMT5) மற்றும் LNP8701 (SOS1) ஆகியவற்றின் பிரத்யேக நிரந்தர உரிமத்தை US$1.6 மில்லியன் மதிப்பில் காவேரி தெரபியூட்டிக்ஸ் இன்க். (Kaveri Therapeutics Inc.) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. லூபினின் முழுச் சொந்தமான அமெரிக்க துணை நிறுவனமான லூபின் இன்க். (Lupin Inc. - LI), காவேரி நிறுவனத்திற்கு ஆரம்பகட்ட நிதி (Seed Funding) வழங்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் லூபின் இன்க். 3,32,000 பொதுப் பங்குகளை பெற்று, காவேரி தெரபியூட்டிக்ஸ் நிறுவனத்தில் தனது பங்கினை 82.2% ஆக உயர்த்தியுள்ளது.
4–12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்
பள்ளிக் கல்வித் துறை, 4 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (Emerging Technologies), பிராம்ப்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering), STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) கல்வி, மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு ஆகியவை இடம்பெற உள்ளன. இதற்காக பாடத்திட்ட வடிவமைப்பு குழு சென்னையில் கூட்டம் நடத்தி பாடத்திட்டத்தை வடிவமைத்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளில் TNSPARK கற்பிக்கப்பட்டு வருவதாகவும், பிராம்ப்ட் இன்ஜினியரிங் பாடமும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 4 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம், பாடப்பிரிவு மற்றும் பாடப்புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம், பாடப்பிரிவு மற்றும் பாடப்புத்தகங்கள் 2027–28 கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும்.
விளையாட்டுச் செய்திகள்
டூர் டி பிரான்ஸ் தனிநபர் டைம்-ட்ரயலில் ரெம்கோ எவெனெபோல் வெற்றி
ஒலிம்பிக் சாம்பியனான ரெம்கோ எவெனெபோல், பெல்ஜியம் சார்பில், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் போட்டியின் 26.1 கி.மீ தனிநபர் டைம்-ட்ரயல் பிரிவில் 32 நிமிடங்கள் 19 வினாடிகளில் பந்தயத்தை முடித்து வெற்றி பெற்றார். நடப்பு சாம்பியன் தடேஜ் போகச்சார் 28 வினாடிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தையும், மத்தியாஸ் ஸ்கெல்மோஸ் 33 நிமிடங்கள் 23 வினாடிகளில் பந்தயத்தை முடித்து மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
பிஃபா உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஸ்பெயின்
சமீபத்தில் வெளியிடப்பட்ட பிஃபா (FIFA) உலகத் தரவரிசையில், உலக சாம்பியனான ஸ்பெயின் அர்ஜென்டினாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளது. பிரேசில் ஐந்தாவது இடத்திற்கும், மொராக்கோ ஆறாவது இடத்திற்கும் முன்னேறி, போர்ச்சுகலை முந்தியுள்ளன. பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை நிறைவு செய்கின்றன.
சர்வதேசச் செய்திகள்
கனடா பொருட்களுக்கு 50% சுங்கவரி விதித்த அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா அமெரிக்காவின் வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால் பொருட்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறி, பெரும்பாலான கனடா பொருட்கள் மீது 50% சுங்கவரி விதித்துள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, இந்த சுங்கவரி 30 நாட்களில் அமலுக்கு வரும். கனடா பிரதமர் மார்க் கர்னி, அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கனடா தயாராக இருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்ட புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளில் கனடா கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுச் செயலாளராக எட் மிலிபேண்ட்; செயற்கை நுண்ணறிவு அமைச்சராக கனிஷ்கா நாராயண்
தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் எட் மிலிபேண்ட், பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு ஆற்றல் துறை அமைச்சராக பணியாற்றியதுடன், 2025 பிப்ரவரியில் இந்தியா வந்தபோது நான்காவது இந்தியா–பிரிட்டன் ஆற்றல் உரையாடலுக்கு (India–U.K. Energy Dialogue) இணைத் தலைமை வகித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா–பிரிட்டன் விரிவான உத்திசார் கூட்டுறவு (Comprehensive Strategic Partnership) மற்றும் CETA அமல்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒவெட் கூப்பர் சுகாதாரச் செயலாளராக, ஜான் ஹீலி நிதி அமைச்சராக (Chancellor of the Exchequer), ஷபானா மஹமூத் உள்துறைச் செயலாளராக, வெஸ் ஸ்ட்ரீட்டிங் பாதுகாப்புச் செயலாளராக, லிசா நந்தி கலாச்சாரச் செயலாளராக, மியாட்டா ஃபான்புல்லே ஆற்றல் துறைச் செயலாளராக, மற்றும் அலெக்ஸ் நோரிஸ் நீதித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பிறந்த கனிஷ்கா நாராயண், வேல்ஸின் வேல் ஆஃப் கிளாமோர்கன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரெண்ட் கச்சா எண்ணெய் US$90-ஐ தாண்டியதால் இந்திய அரசுப் பத்திரங்கள் சரிவு
இந்திய அரசுப் பத்திரங்களின் மதிப்பு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1% உயர்ந்து ஒரு பேரலுக்கு US$ 90.16-ஐ எட்டியதைத் தொடர்ந்து சரிந்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்த நிலையில், இந்த விலை உயர்வு பணவீக்கம், நிதி ஸ்திரத்தன்மை, மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகச் சமநிலை குறித்த கவலைகளை ஏற்படுத்தியது. 2036-ஆம் ஆண்டு காலாவதியாகும் 6.94% அரசுப் பத்திரத்தின் வட்டி வருவாய் (Yield) 2 அடிப்படைப் புள்ளிகள் (bps) உயர்ந்து 6.79% ஆக பதிவானது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெப்ப அழுத்தத்தின் சுகாதாரத் தாக்கம் குறித்த ஆய்வு
வெப்ப அழுத்தத்தின் (Heat Stress) உடல் மற்றும் மனநல தாக்கத்தை மதிப்பீடு செய்து, தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட வெப்ப-தாக்க அளவீட்டுக் கருவியை உருவாக்கும் ஆய்வு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF), மாநில அரசுகள், SCARF, இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு, மற்றும் ஐ.சி.எம்.ஆர். (ICMR) நிறுவனங்களான தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனம், பெலகாவி மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம், சென்னை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்கிறது. இந்த ஆய்வு வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்ளும் சுகாதார அமைப்பின் தயார்நிலையையும் மதிப்பீடு செய்யும். தமிழ்நாட்டில், பெருங்குடி (சென்னை) மற்றும் பூம்புகார் (மயிலாடுதுறை) ஆகிய இடங்களும், கர்நாடகாவில், சிர்வார் (ராய்ச்சூர்) மற்றும் செல்லக்கரே (சித்ரதுர்கா) ஆகிய இடங்களும் ஆய்வுக் களங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆய்வுக் களத்திலும் 1,200 குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆய்வின் ஒரு நோக்கமாக தனிப்பயனாக்கப்பட்ட முன்எச்சரிக்கை அமைப்பு செயலி (Early Warning System App) உருவாக்கப்பட உள்ளது.
வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-07-2026
Wed Jul 15 2026