TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
முக்கிய தினங்கள்
சர்வதேச நிலா நாள் – ஜூலை 21
சர்வதேச நிலா நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு Apollo 11 பயணத்தின் மூலம் மனிதன் முதன்முறையாக நிலவில் காலடி வைத்ததை நினைவுகூரும் வகையில், 2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இந்த நாளை அறிவித்தது. விண்வெளியின் அமைதியான மற்றும் நிலையான ஆய்வை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் – ஜூலை 21
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1947 ஜூலை 21 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை, இந்தியாவின் தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இந்தக் கொடி பிங்கலி வெங்கைய்யா வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மையத்தில் இருந்த சர்க்காவிற்கு (Charkha) பதிலாக 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரம் இடம்பெற்றது. இந்தக் கொடி 1947 ஆகஸ்ட் 15 முதல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசியக் கொடியாக நடைமுறைக்கு வந்தது.
சர்வதேசச் செய்திகள்
ஹங்கேரி அதிபர் பதவியை நிராகரித்த ஜூடித் போல்கர்
சதுரங்க ஜாம்பவான் ஜூடித் போல்கர், ஹங்கேரி பிரதமர் பீட்டர் மக்யார் வழங்கிய ஹங்கேரி குடியரசுத் தலைவர் பதவியை ஏற்கும் அழைப்பை நிராகரித்தார். விக்டர் ஓர்பன் தலைமையிலான 16 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நபராக அவர் பரிந்துரைக்கப்பட்டார். நாட்டை ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்து ஜூடித் போல்கர் அந்த அழைப்பை ஏற்க மறுத்தார். அதிபர் தமாஸ் சுல்யோக், கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
RBI சிறப்பு நாணயப் பரிமாற்ற வசதி மூலம் $20.72 பில்லியன் அந்நியச் செலாவணி ஈர்ப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அந்நியச் செலாவணியைத் திரட்டுவதற்காக வெளிநாட்டு நாணய வங்கியல்லாத வெளிநாடு வாழ் இந்தியர் [FCNR(B)] வைப்புத்தொகைகள், வெளிநாட்டு வணிகக் கடன்கள் (ECBs) மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் (OFCBs) ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற (Foreign Currency Swap) வசதி, ஜூலை 17, 2026 நிலவரப்படி $20.72 பில்லியன் அந்நியச் செலாவணியை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் FCNR(B) மூலம் $17.4 பில்லியன், OFCBs மூலம் $1.97 பில்லியன், ECBs மூலம் $1.34 பில்லியன் திரட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் செலுத்துகை சமநிலையை (Balance of Payments) வலுப்படுத்தவும், மூலதன வரவை ஊக்குவிக்கவும், ஜூன் 5, 2026 அன்று இந்த சலுகை நாணயப் பரிமாற்ற வசதியை RBI அறிவித்தது. இந்த வசதி ஜூன் 8, 2026 முதல் நடைமுறையில் உள்ளது.
WTO மீன்வள மானியங்கள் உடன்படிக்கையில் இந்தியா இணைந்தது
இந்தியா, உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்வள மானியங்கள் தொடர்பான உடன்படிக்கையில் இணைந்துள்ளது. இந்த உடன்படிக்கை சட்டவிரோத மீன்பிடி, மீன் வளங்களை அளவுக்கு அதிகமாகச் சுரண்டுதல் ஆகியவற்றுக்கு அரசாங்க மானியம் வழங்குவதைத் தடை செய்கிறது. இது கடல்சார் இயற்கை மீன்பிடி மற்றும் கடலில் நடைபெறும் மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்கான மானியங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கை 2022-ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (WTO) 12-ஆவது அமைச்சர்கள் மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை நோக்கத்தைக் கொண்ட WTO-வின் முதல் பன்முக உடன்படிக்கை ஆகும்.
பிரிட்டன் பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு
தொழிலாளர் கட்சியின் தலைவரான ஆண்டி பர்ன்ஹாம் (56), ஜூலை 20 அன்று பிரிட்டன் பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். அவர் 2016-க்கு பிறகு பதவியேற்ற 7-ஆவது பிரதமர் ஆவார். பதவியேற்ற பின்னர் லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்-இல் தனது முதல் உரையை நிகழ்த்தினார். முன்னாள் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அரசர் சார்லஸ் புதிய அரசை அமைக்க ஆண்டி பர்ன்ஹாமை அழைத்தார். அதற்கு முன், அவர் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமனம்
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2024 அக்டோபரில் இஸ்ரேல் படைகளுடனான மோதலில் உயிரிழந்த யஹ்யா சின்வார் என்பவருக்குப் பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்தியா–மால்டோவா வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த ஒப்புதல்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மால்டோவா நாட்டிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, சிசினோவ் நகரில் மால்டோவா அதிபர் மாயா சாண்டுவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒத்துழைப்பு வேளாண்மை, தளவாடங்கள், உட்கட்டமைப்பு, சுகாதாரம், மருத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொது எண்ம உட்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளை உள்ளடக்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா–மால்டோவா வணிகக் கூட்டமைப்பு நடைபெற்றது. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மால்டோவா நிபுணர்களுக்கான பயிற்சி இடங்களை இந்தியா இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மால்டோவாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றார். இது அவரது மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாகும்; தொடர்ந்து அவர் ஜூலை 21–22 அன்று வட மாசிடோனியா மற்றும் ஜூலை 23–25 அன்று ரோமேனியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மாநிலச் செய்திகள்
சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வீட்டு வாசலில் சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கும் கர்நாடக அரசு
கர்நாடக அரசு, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) நடைபெற்று வரும் நிலையில், நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் (Permanent Residence Certificate – PRC) மற்றும் சாதிச் சான்றிதழ்களை வீட்டு வாசலிலேயே வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தொடங்கி வைத்தார். நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் (PRC), தேர்தல் ஆணையம் (EC) வாக்காளர் சரிபார்ப்பிற்காக ஏற்றுக்கொண்டுள்ள 11 ஆவணங்களில் ஒன்றாகும். சான்றிதழ்கள் வழங்கும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில், வட்டாட்சியர்களுடன் (Tahsildars) சேர்த்து துணை வட்டாட்சியர்களுக்கும் (Deputy Tahsildars) PRC வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர் பயனாளிகளின் விவரங்கள் மற்றும் ஒப்புதல்களை பதிவு செய்வதற்காக மொபைல் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இந்திரம்மா வீட்டுவசதி திட்டம் தொடக்கம்
தெலங்கானா அரசு, ஹைதராபாத் முக்கிய நகர்ப்புறப் பகுதியில் (Hyderabad Core Urban Region) இந்திரம்மா வீட்டுவசதி திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 10 வரை, மீசேவா (MeeSeva) மையங்கள், மீசேவா இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) சேவைகள் மூலம் பெறப்படும். இத்திட்டத்தின் கீழ் அரசின் மானியம் ₹5 லட்சம், பயனாளியின் உத்தேசப் பங்களிப்பு ₹6 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
மூன்றாவது மொழிக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் கர்நாடக அரசு
கர்நாடக அரசு, 2026–27 கல்வியாண்டு முதல் தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF)-இன் கீழ், மாநிலத்தின் 1,652 அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மூன்றாவது மொழிக்கு பதிலாக திறன் கல்வியின் (Skill Education) ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சமக்ர சிக்ஷனா–கர்நாடகா (SSK), செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்தைக் கற்பிக்க விருந்தினர் ஆசிரியர்களை (Guest Teachers) நியமிப்பதற்கும், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு செய்திகள்
எமிஸ் தளத்தில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியீடு
பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் செயல்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பகுப்பாய்வு அறிக்கைகளை எமிஸ் (EMIS – Education Management Information System) தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைகள் 2025–26 கல்வியாண்டு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பள்ளி வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (Chief Educational Officers) மூலம் அனைத்து தலைமையாசிரியர்களும் இந்த அறிக்கைகளை பயன்படுத்தி ஆசிரியர்களுடன் மாணவர்களின் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்து, அவர்களின் கற்றல் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை உருவாக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதாரச் செய்திகள்
ஜூன் மாதத்தில் முன்னணி உள்கட்டமைப்புத் துறைகள் 5% வளர்ச்சி பதிவு
இந்தியாவின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி ஜூன் மாதத்தில் 5% ஆக உயர்ந்து, கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2011–12-க்கு பதிலாக 2022–23-ஐ அடிப்படை ஆண்டாக கொண்டு வெளியிடப்பட்ட முதல் மாதத் தரவாகும். மேலும், இரும்புத் தாது 9-ஆவது முன்னணி உள்கட்டமைப்புத் துறையாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 9 துறைகள் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை உள்ளடக்கியவை. ஜூன் மாதத்தில் இரும்புத் தாது உற்பத்தி 43.9%, சிமெண்ட் மற்றும் மின்சாரம் தலா 9.8%, எஃகு 4.6%, நிலக்கரி 1.4% வளர்ச்சி கண்டன. ஏப்ரல்–ஜூன் காலாண்டில் இந்தத் துறைகளின் மொத்த வளர்ச்சி 3.6% ஆக பதிவாகியுள்ளது. இந்த 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகள், இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சிக் குறியீட்டில் (IIP) 40%க்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. மேலும், IIP-யின் அடிப்படை ஆண்டும் 2022–23 ஆக மாற்றப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அர்ஜுன் எரிகைசி முதலிடம்
சென்னையில் நடைபெறும் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-வது சுற்றில், உலக சாம்பியன் டி. குகேஷை வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி முதலிடத்திற்கு முன்னேறினார். 8 கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி டபுள் ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெறுகிறது. போட்டியின் மொத்த பரிசுத் தொகை ₹75 லட்சம் ஆகும். அர்ஜுன் எரிகைசி 63-வது நகர்த்தலில் குகேஷை வென்றார். மற்ற ஆட்டங்களில் எம். பிரணேஷ் – ஹான்ஸ் நீமன் ஆட்டம் டிராவில் முடிந்தது; நோடிர்பெக் அப்துசத்தோரோவ், நிஹால் சரினை வீழ்த்தினார்; அலிரேசா ஃபிரௌஜா – டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் ஆட்டம் டிராவில் முடிந்தது. 5-வது சுற்று முடிவில் அர்ஜுன் எரிகைசி மற்றும் அலிரேசா ஃபிரௌஜா தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
2026 பிஃபா உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின்
ஸ்பெயின், 2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று 104 போட்டிகள் நடைபெற்றன. நியூஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 106-ஆவது நிமிடத்தில் பெரான் டோரஸ் அடித்த கோல் வெற்றிக்கோலாக அமைந்தது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னான்டெஸ் மற்றும் லியாண்ட்ரோ பரேடெஸ் ஆகியோர் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டனர். கிலியன் எம்பாப்பே 10 கோல்களுடன் தங்கக் காலணி (Golden Boot) விருதை வென்றார். ரோட்ரி (ஸ்பெயின்) தங்கப் பந்து (Golden Ball), உனாய் சிமோன் (ஸ்பெயின்) தங்கக் கையுறை (Golden Glove), பால் குபர்சி (ஸ்பெயின்) சிறந்த இளம் வீரர் விருதுகளை பெற்றனர். ஸ்பெயின் தொடர் முழுவதும் ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்து சாதனை படைத்தது. லூயிஸ் டி லா புயண்டே 65 ஆண்டுகள் 29 நாட்கள் வயதில் உலகக் கோப்பையை வென்ற மிகவும் மூத்த பயிற்சியாளர் ஆனார். சாம்பியன் அணியான ஸ்பெயினுக்கு ₹430 கோடி, அர்ஜென்டினாவுக்கு ₹320 கோடி, இங்கிலாந்துக்கு ₹260 கோடி, பிரான்சுக்கு ₹220 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2030 பிஃபா உலகக் கோப்பை ஸ்பெயின், மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
தேசியச் செய்திகள்
இந்தியாவில் முதல் முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி
மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரகம் (DCGI), இந்தியாவில் முதல் முறையாக டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசிக்கு சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி ஜப்பானின் டகேடா (Takeda) நிறுவனத்தின் QDENGA (TAK-003) தடுப்பூசிக்கு வழங்கப்பட்டுள்ளது. QDENGA என்பது உயிருடன் பலவீனப்படுத்தப்பட்ட (Live-attenuated), நான்கு வகை (Tetravalent) டெங்கு தடுப்பூசியாகும். இது DENV-1, DENV-2, DENV-3, DENV-4 ஆகிய டெங்கு வைரஸின் நான்கு செரோடைப்புகளுக்கும் எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்படுகிறது; முதல் தவணைக்குப் பிறகு 3 மாதங்கள் கழித்து இரண்டாவது தவணை செலுத்தப்படுகிறது. டெங்கு பாதிப்பு வரலாற்றை உறுதிப்படுத்தும் இரத்தப் பரிசோதனை இத்தடுப்பூசிக்கு தேவையில்லை. இது 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு, முன்பு டெங்கு பாதிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்தகுதி (Prequalification) வழங்கப்பட்டுள்ளதுடன், 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் அறிமுகம்
உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்திய அவசரச் சட்டத்திற்கு (Ordinance) மாற்றாக மசோதா, மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உயர்வுக்கு மத்திய அமைச்சரவை மே மாதத்தில் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். ஜனவரி 1 நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 92,101 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2025 ஆம் ஆண்டில் 75,410 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 65,615 வழக்குகள் மட்டுமே தீர்வு காணப்பட்டன. அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளைச் சமாளிக்க நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியம் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவசரச் சட்டம் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய பின் 6 வாரங்களுக்குள் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையெனில் அது காலாவதியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 கி.மீ. சுற்றளவில் வசிப்போருக்கு ‘ராஜ்மார்க் யாத்ரா’ செயலி மூலம் உள்ளூர் சுங்கப் பாஸ்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் வாகன ஓட்டிகள் ராஜ்மார்க் யாத்ரா கைப்பேசி செயலி மூலம் உள்ளூர் சுங்கப் பாஸை பெறலாம் என்று அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ம தளம், பயனரின் ஒப்புதலின் அடிப்படையில் டிஜிலாக்கர் (DigiLocker), வாஹன் (Vahan) மற்றும் ஃபாஸ்டேக் (FASTag) அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், முகவரி சரிபார்ப்பிற்கு புவியியல் தகவல் அமைப்பு (GIS) அடிப்படையிலான சரிபார்ப்பு முறையும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மார்க் மித்ரா (Marg Mitra) உதவி மையம் அறிமுகப்படுத்தப்பட்டு, 22 இந்திய மொழிகளில் தகவல், குறைதீர்ப்பு, ஃபாஸ்டேக் புதுப்பித்தல், KYC, வருடாந்திர மற்றும் உள்ளூர் பாஸ் தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதிய பலன்கள் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு
உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதிய மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய பலன்களை வழங்குவதற்கான தேசிய கொள்கையை உருவாக்க 2 வாரங்களுக்குள் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மாநிலங்களுக்கு இடையே ஓய்வுக்குப் பிந்தைய பலன்களில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, முன்னாள் நீதிபதியும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவருமான வி.எஸ். தவே தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜயமால்யா பாக்ஷி, நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. மேலும், நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் வழங்குவது தொடர்பான அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-07-2026
Wed Jul 15 2026