TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23-05-2026

Trending TNPSC

By

4 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23-05-2026

தமிழ்நாடு செய்திகள்

தமிழக அமைச்சரவை முழுப் பலத்தை எட்டியது

விசிக எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் ஐயுஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் தமிழக அமைச்சர்களாக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் முன்னிலையில் மே 22 அன்று பதவியேற்றனர். இது முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் இரண்டாவது அமைச்சரவை விரிவாக்கமாகும். இவர்களின் பதவியேற்புடன், 234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையான 35 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையாக தமிழக அமைச்சரவை முழுப் பலத்தை எட்டியது. திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ப் வாரியத் துறை ஒதுக்கப்பட்டது. சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் தலைமைச் செயலர் மு.சாய்குமார், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொறுப்பேற்ற பின்னர் வன்னி அரசு, 2026-27ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக-பொருளாதார தொழில் முனைவுத் திட்டத்திற்கு ரூ.75 கோடி, 120 கிராம அறிவுசார் மையங்கள் அமைக்க ‘நபார்டு ரிட்’ திட்டத்தின் கீழ் ரூ.61.56 கோடி, மற்றும் பிரதமரின் அனுகுசித் ஜாதி அபியுதய் யோஜனா திட்டத்தின் கீழ் 12 மாணவர் விடுதிகள் கட்ட ரூ.7.99 கோடி நிதி ஒப்புதல்களை வழங்கினார்.

தேசியச் செய்திகள்

தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல் – ஜூன் 18

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18 அன்று நடைபெறுகிறது. எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சி.வி. சண்முகம் ராஜிநாமா செய்ததால் இந்த இடம் காலியாகியுள்ளது. இதே நாளில் மகாராஷ்டிரத்தில் ஒரு இடைத்தேர்தலும், 10 மாநிலங்களில் 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை நடைபெறும். ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயம், அருணாசலப் பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 21 முதல் ஜூலை 19 வரை நிறைவடைகிறது. பதவிக்காலம் நிறைவடையும் முக்கிய உறுப்பினர்களில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜார்ஜ் குரியன், திக்விஜய் சிங் ஆகியோர் அடங்குவர். 244 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 149 உறுப்பினர்கள், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 78 உறுப்பினர்கள், மற்றும் கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளுக்கு 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

டிஆர்டிஓவின் அக்னி-1 ஏவுகணை சோதனை

டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) உருவாக்கிய அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை மே 22 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 700 கி.மீ. முதல் 1,200 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. மேலும், 2,500 கிலோ வரை வெடிகுண்டுகள் அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றது. இந்த சோதனை ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூர் சோதனை தளத்தில் நடத்தப்பட்டு, ஏவுகணையின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப தரநிலைகள் பரிசோதிக்கப்பட்டன. 1979 முதல் பயன்பாட்டில் உள்ள அக்னி-1 ஏவுகணை, சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியாவிடம் அக்னி-1 முதல் அக்னி-4 வரை உள்ள ஏவுகணைகள் இருப்பதுடன், அவற்றின் தாக்குதல் வரம்பு 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரை உள்ளது.

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரி நிதி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025–26 நிதியாண்டிற்காக, மத்திய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி வருவாய் உபரியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இது 2024–25 நிதியாண்டில் வழங்கப்பட்ட ரூ.2.69 லட்சம் கோடியைவிட 6.7% அதிகம் ஆகும். இடர் ஒதுக்கீடுகள் மற்றும் சட்டரீதியிலான நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்பான RBI-யின் நிகர வருவாய், 2025 நிதியாண்டில் ரூ.3.13 லட்சம் கோடியில் இருந்து 2026 நிதியாண்டில் ரூ.3.96 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனால், ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை 20.61% உயர்ந்து, மார்ச் 31 நிலவரப்படி ரூ.91.97 லட்சம் கோடியாக விரிவடைந்தது. ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர் வாரியத்தின் முடிவின்படி, 2025–26 நிதியாண்டிற்கான இடர் காப்பு நிதிக்கு ரூ.1.09 லட்சம் கோடி மாற்ற முடிவு செய்யப்பட்டது; கடந்த ஆண்டில் இந்த தொகை ரூ.44,861 கோடி ஆக இருந்தது.

எபோலா தடுப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் எபோலா வைரஸ் பரவலைத் தடுக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மருத்துவத் தயார்நிலையை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. காங்கோ குடியரசு மற்றும் உகாண்டா நாடுகளில் ஏற்பட்டுள்ள எபோலா பரவலை உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை செயலர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (IDSP) கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வு, தசை வலி, தலைவலி, தொண்டைப் புண், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, தோல் மற்றும் கண் அழற்சி ஆகியவை எபோலா அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் வசதிகள், பிரத்யேக ஆம்புலன்ஸ், பயிற்சி பெற்ற பணியாளர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), பரிசோதனைக் கூடங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புணேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனம் (ICMR-NIV) எபோலா மாதிரிகளை பரிசோதிக்க தயார்நிலையில் உள்ளது. இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அறிகுறிகளுடன் வரும் பயணிகள் 21 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24-05-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-05-2026

சமகால இணைப்புகள்