TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-05-2026

Trending TNPSC

By

13 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-05-2026

தேசியச் செய்திகள்

மாநிலத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை வரம்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164(1ஏ) பிரிவின்படி, ஒரு மாநிலத்தின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, முதல்வரைச் சேர்த்து, அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையின் 15 சதவீதத்தை மீறக்கூடாது. அந்த அடிப்படையில், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில், அதிகபட்சமாக 35 பேர் அமைச்சர்களாக இருக்கலாம்.

‘பிரகதி 2026’ கூட்டு ராணுவப் பயிற்சி

‘பிரகதி 2026’ என்ற பெயரில் நடைபெறும் 13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி, மேகாலய மாநிலத்தின் ரிபோய் மாவட்டத்தில் உள்ள உம்ரோய் ராணுவ நிலையத்தில் மே 20 அன்று தொடங்கியது. இதில் இந்தியா, பூடான், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பிலிப்பீன்ஸ், ஷெஷல்ஸ், இலங்கை, வியத்நாம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தப் பயிற்சி 2 வாரங்கள் நடைபெறவுள்ளது. மலைப்பாங்கான மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நோக்கம் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டு பயிற்சி, கலாசார பரிமாற்றம் மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவதாகும்.

125 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி

மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், 125 நாள் வேலைத் திட்டத்திற்காக ஏற்கெனவே 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கியுள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு சட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக கொண்டுவரப்பட்ட விபி-ஜிராம்ஜி 125 நாள் வேலைத் திட்ட மசோதா கடந்த 2025 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமாகியது. புதிய சட்டத்தின்படி வேலைவாய்ப்பு காலம் 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திட்ட நிதியில் மத்திய அரசு 60%, மாநில அரசுகள் 40% பங்களிக்கும். அதேவேளையில் வடகிழக்கு மாநிலங்கள், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் நிதி பங்கீடு 90:10 விகிதத்தில் அமையும். ஜூலை 1 முதல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக செயலர் ரோஹித் கன்சல், காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உலாகா தலைமையிலான குழுவிடம் தெரிவித்தார். திட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முகஅடையாள வசதி கொண்ட ஸ்மார்ட் பணி அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்திற்கான ஆண்டு செலவு ரூ.1.51 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் மத்திய அரசின் பங்கு ரூ.95,692.31 கோடி ஆகும்.

முன்னணி உட்கட்டமைப்புத் துறைகள் 1.7% வளர்ச்சி

இந்தியாவின் 8 முன்னணி உட்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 2026 ஏப்ரல் மாதத்தில் 1.7 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு மே 20 அன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 8 துறைகள் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகியவையாகும். இத்துறைகள் 2026 மார்ச் மாதத்தில் 1.2 சதவீத சரிவை சந்தித்திருந்தன. ஏப்ரலில் நிலக்கரி உற்பத்தி 8.7 சதவீதம் குறைந்தது. பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள் உற்பத்தி 0.5 சதவீதம் குறைந்தது. உர உற்பத்தி மார்ச்சில் 24.6 சதவீத சரிவிலிருந்து ஏப்ரலில் 8.6 சதவீத சரிவாக முன்னேற்றம் கண்டது. அதேவேளையில் சிமெண்ட் உற்பத்தி 9.4 சதவீத வளர்ச்சியும், எஃகு உற்பத்தி 6.2 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்தன. நாட்டின் தொழில் உற்பத்தி குறியீட்டு எண் (IIP) வளர்ச்சி பிப்ரவரியில் 5.2 சதவீதத்திலிருந்து மார்சில் 4.1 சதவீதமாக குறைந்துள்ளது.

மேல் கங்கை பகுதியில் புதிய நீர்மின் திட்டங்களுக்கு அனுமதி இல்லை

உத்தரகண்ட் மாநிலத்தின் மேல் கங்கை பகுதியில் புதிய நீர்மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மே 19 அன்று தாக்கல் செய்த கூட்டு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் பிரமாணப் பத்திரத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், மற்றும் மின்சார அமைச்சகம் இணைந்து தாக்கல் செய்துள்ளன. அலக்நந்தா மற்றும் பாகீரதி நதிப் படுகைகளில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள அல்லது கட்டுமான நிலையில் உள்ள 7 நீர்மின் திட்டங்களைத் தவிர புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 திட்டங்களின் மொத்த உற்பத்தித் திறன் 2,150 மெகாவாட் ஆகும். இதில் 1,000 மெகாவாட் தெஹ்ரி பம்ப் ஸ்டோரேஜ் திட்டம், 520 மெகாவாட் தபோவன் விஷ்ணுகாட் திட்டம், மற்றும் 444 மெகாவாட் விஷ்ணுகாட் பிபல்கோட்டி திட்டம் ஆகியவை அடங்கும். 2024 ஆகஸ்டில், அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையில் உச்ச நீதிமன்றம் குழுவொன்றை அமைத்தது. இந்த வழக்கு 2013 கேதார்நாத் வெள்ளப் பேரழிவிற்கு பிறகு உருவானது. அந்த வெள்ளத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி சோப்ரா தலைமையிலான நிபுணர் குழு-I, 2014-ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட 24 திட்டங்களில் 23 திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.

ஹாக்கி பயிற்சியாளர் பல்தேவ் சிங்கிற்கு பத்மஸ்ரீ

ஹாக்கி பயிற்சியாளர் பல்தேவ் சிங், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை மே 25 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து பெறுகிறார். 75 வயதான பல்தேவ் சிங், ஹரியானாவின் ஷஹாபாத் மார்கண்டா நகரத்தை முக்கிய ஹாக்கி வீரர்கள் உருவாகும் மையமாக மாற்றியவர். அவர் 1982-ஆம் ஆண்டு ஹரியானா விளையாட்டுத் துறையின் பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார்; பின்னர் 1993-இல் மீண்டும் ஷஹாபாத் மார்கண்டாவிற்கு திரும்பி ஹாக்கி அகாடமியை முன்னணி பயிற்சி மையமாக உருவாக்கினார். அவர் தனது விளையாட்டு வாழ்க்கையை பையினி சாஹிப் நாம்தாரி ஹாக்கி அணியில் தொடங்கி, தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS) மூலம் ஹாக்கி பயிற்சியில் டிப்ளமோ பெற்றார். 1980-களின் தொடக்கத்தில் பெங்களூரில் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 1993-இல் இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் தேர்வாளராகவும் இருந்தார். மேலும், 1996 மெட்ராஸ் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றினார். 2001 முதல் 2004 வரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த அவர், 2004 ஆசியக் கோப்பையில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல வழிநடத்தினார்.

உத்தர பிரதேசத்தின் பாண்டாவில் கடும் வெப்பம் பதிவு

உத்தர பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பாண்டா மாவட்டம், மே 19 அன்று 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவு செய்து இந்தியாவின் மிக வெப்பமான பகுதியாக மாறியது. இதே அளவிலான வெப்பநிலை ஏப்ரல் 27-ஆம் தேதியும் பதிவாகியுள்ளது. மேலும், மே 19 (48.2°C), மே 17 (46.4°C) மற்றும் ஏப்ரல் 17 (45.4°C) ஆகிய நாட்களில் ஆசியாவில் அதிக வெப்பநிலையைப் பதிவு செய்த பகுதியாகவும் பாண்டா இருந்தது. பாண்டா மாவட்டத்தின் வரலாற்றிலேயே அதிகபட்ச வெப்பநிலை 2019 ஜூன் 10 அன்று பதிவான 49.2 டிகிரி செல்சியஸ் ஆகும். பசுமைப் பரப்பு குறைவு, மணல் கொள்ளை, வற்றும் ஆறுகள் மற்றும் வரண்ட பாறை நிலப்பரப்பு காரணமாக பாண்டா மாவட்டம் மனிதனால் உருவாக்கப்பட்ட வெப்பத் தீவாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முதல் ஐஜியாக கே. பவானீஸ்வரி நியமனம்

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் படி, இந்த சிறப்பு பிரிவு ஐஜி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக காவல் துறையின் பொதுப்பிரிவு ஐஜியாக இருந்த கே. பவானீஸ்வரி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முதல் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1997-ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த அவர், முதலில் கள்ளக்குறிச்சியில் பணியாற்றினார். பின்னர் 2006-ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி பிரிவில் பணியாற்றினார். 2013-ஆம் ஆண்டு, கியூ பிரிவின் முதல் பெண் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். மேலும், அவர் தமிழக காவல் துறையில் டிஐஜி மற்றும் ஐஜி உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

சர்வதேசச் செய்திகள்

இந்தியா-இத்தாலி கூட்டு செயல் திட்டம் 2025-2029

பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான அரசுமுறை பயணத்தின் ஒரு பகுதியாக இத்தாலி சென்றார். ரோம் நகரில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், இந்தியா-இத்தாலி கூட்டு செயல் திட்டம் 2025-2029 தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இருநாடுகளும் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், அணுமின் ஆற்றல், விண்வெளி, பாதுகாப்புத் துறை, கடல்சார் துறை, துறைமுக நவீனமயமாக்கல், உட்கட்டமைப்பு மற்றும் நீல பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டன. இந்தியா-இத்தாலி இடையேயான வர்த்தகம் 20 பில்லியன் யூரோ (ரூ.2.24 லட்சம் கோடி) இலக்கை நெருங்கி வருகிறது. இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட இத்தாலிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-இத்தாலி புத்தாக்க மையம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி, இத்தாலி அதிபர் செர்ஜியோ மாட்டரெல்லாவை சந்தித்து வர்த்தகம், முதலீடு, செயற்கை நுண்ணறிவு, கனிம வளங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி தொடர்பான ஒத்துழைப்புகள் குறித்து விவாதித்தார். மேலும், இருநாடுகளும் பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட உறுதியளித்தன.

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4% - ஐ.நா. கணிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UNDESA) வெளியிட்ட அறிக்கையின்படி, நிகழாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட 6.6% கணிப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருந்தது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.5% ஆக இருக்கும் என்றும், இது ஜனவரியில் வெளியிடப்பட்ட கணிப்பை விட 0.2% குறைவு என்றும் அறிக்கை கூறுகிறது. மேலும், அமெரிக்கா-ஈரான் மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட மேற்காசிய நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.ஐ. முதலீட்டுக்காக மெட்டா பணிநீக்கம்

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, செலவினங்களை குறைத்து செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில், தனது பணியாளர்களில் சுமார் 8,000 பேரை அதாவது சுமார் 10% ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி ஜேனல் கேல் வெளியிட்ட தகவலின்படி, சுமார் 7,000 ஊழியர்கள் ஏ.ஐ. தொடர்பான புதிய பிரிவுகளுக்கு மாற்றப்பட உள்ளனர். மேலும், நிறுவனம் ஏற்கெனவே சுமார் 6,000 காலிப் பணியிடங்களை ரத்து செய்துள்ளது. கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், மெட்டா நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 12.5 பில்லியன் முதல் 14.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏ.ஐ. துறையில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளால், இந்த மாதத்தில் உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிநீக்கங்களால் 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, லிங்க்ட்இன் நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணிநீக்க அறிவிப்பு வழங்கியதுடன், உலகளவில் தனது பணியாளர்களில் சுமார் 5%, அதாவது 875 பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

சியோலில் இந்தியா–தென் கொரியா பாதுகாப்பு பேச்சுவார்த்தை

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தென் கொரிய தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆன் கியூ-பேக் உடன் சியோல் நகரில் மே 20 அன்று இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாதுகாப்புத் தொழில், கடல்சார் பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தளவாடங்கள், ராணுவ பரிமாற்றங்கள், சைபர் பாதுகாப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய மற்றும் விதிமுறை அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த உறுதிப்பாட்டை இருநாடுகளும் மீண்டும் வலியுறுத்தின. இந்தியாவின் Act East Policy மற்றும் தென் கொரியாவின் பிராந்திய வியூகக் கண்ணோட்டம் இடையேயான ஒருங்கிணைப்பும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கொரியா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் இடையேயான பயிற்சி பரிமாற்றத்திற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டன. மேலும், சுய இயக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் திசைதிருப்பப்பட்ட ஆற்றல் ஆயுத அமைப்புகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்களுக்காக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்களில் Make in India திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மே 23 முதல் மார்கோ ரூபியோ இந்தியா பயணம்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தனது முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாக மே 23 முதல் 26 வரை இந்தியா வருகிறார். இந்தப் பயணம், பாரசீக வளைகுடா பிராந்திய மோதல்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. தனது பயணத்தின் போது அவர் புது தில்லி, கொல்கத்தா, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு செல்ல உள்ளார். இந்திய அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்தியா இந்த ஆண்டு BRICS, Quad மற்றும் இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களை நடத்த உள்ள நிலையில் இந்தப் பயணம் நடைபெறுகிறது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் தாமஸ் பிகோட், இருதரப்பு மற்றும் உலகளாவிய ராஜதந்திர விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிவித்தார்.

மாநிலச் செய்திகள்

கேரளாவில் சில்வர்லைன் திட்டம் ரத்து

முதல்வர் வி.டி.சதீசன் தலைமையிலான கேரள அரசு, முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) அரசு முன்மொழிந்த திருவனந்தபுரம்-காசர்கோடு சில்வர்லைன் அதிவிரைவு ரயில் திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நில கையகப்படுத்தல் சிக்கல்கள், விரிவான திட்ட அறிக்கை (DPR) இல்லாமை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களால் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட நில கையகப்படுத்தல் அறிவிப்புகளும் திரும்பப் பெறப்படுகின்றன. மேலும், கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் (PSC) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலின் அங்கீகார காலம் ஆகஸ்ட் 31 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசின் தேர்தல் வாக்குறுதிகளை 2031-க்குள் நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 100 நாள் செயல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், பத்ம விருதுகள் பெற தகுதியானவர்களை பரிந்துரைக்க துணைக்குழுக்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

ஆர்செனல் பிரீமியர் லீக் சாம்பியன்

ஆர்செனல் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் 2026 கால்பந்து தொடரில் மே 20 அன்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக 2004-ஆம் ஆண்டு ஆர்செனல் கோப்பையை கைப்பற்றியது. நடப்பு சீசனில் ஆர்செனல் 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது; மான்செஸ்டர் சிட்டி 78 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. 37-ஆவது சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி போர்ன்மெளத் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததால், மீதமிருந்த ஒரு போட்டியில் வென்றாலும் ஆர்செனல் புள்ளிகளை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் மூலம் ஆர்செனல் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. பயிற்சியாளர் மைக்கேல் ஆர்டெட்டா தலைமையில் தொடர்ந்து மூன்று சீசன்கள் ரன்னர்-அப் இடம் பெற்ற ஆர்செனல் தற்போது சாம்பியன் ஆனது. அடுத்து, மே 30 அன்று நடைபெறும் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஆர்செனல் அணி பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (PSG) அணியை எதிர்கொள்ள உள்ளது.

ரஞ்சி கோப்பை 2026-27 அட்டவணை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2026-27 உள்நாட்டு கிரிக்கெட் சீசன் அட்டவணையை மே 20 அன்று வெளியிட்டது. இந்த சீசன் ஆகஸ்ட் 23 அன்று தொடங்கும் துலீப் கோப்பை தொடருடன் ஆரம்பமாகிறது. ரஞ்சி கோப்பை போட்டி அக்டோபர் 11 அன்று இரண்டு கட்டங்களாக தொடங்க உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 1,788 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் பல்வேறு வயது அடிப்படையிலான மற்றும் சீனியர் போட்டிகள் இடம்பெறுகின்றன. துலீப் கோப்பை போட்டி பெங்களூரில் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறும். நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன் ஜம்மு & காஷ்மீர் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1 முதல் 5 வரை ஸ்ரீநகரில் நடைபெறும். ரஞ்சி கோப்பை முதல் கட்டம் அக்டோபர் 11 முதல் நவம்பர் 5 வரையும், இரண்டாம் கட்டம் 2027 ஜனவரி 17 முதல் மார்ச் 3 வரையும் நடைபெறும். சையது முஷ்டாக் அலி கோப்பை நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை நடைபெறும்; லீக் போட்டிகள் மும்பை, மொஹாலி, விசாகப்பட்டினம், கொல்கத்தா நகரங்களில் நடைபெற, நாக்-அவுட் போட்டிகள் நாக்பூரில் நடைபெறும். விஜய் ஹசாரே கோப்பை டிசம்பர் 14 முதல் ஜனவரி 8 வரை நடைபெறும். விஜய் மெர்ச்சென்ட் கோப்பை (யு-16) போட்டி நவம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும்.

ஐபிஎலில் இளம் வயதில் 500 ரன்கள்: வைபவ் சூர்யவன்ஷி சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதில் ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவர் 38 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு முன், 2018-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த், 20 வயதில் 500 ரன்கள் கடந்த இளம் வீரராக இருந்தார். மேலும், ஒரு ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களில் அதிகபட்ச 236.3 ஸ்டிரைக் ரேட் பெற்ற வீரராகவும் வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில், அவர் இதுவரை 53 சிக்ஸர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் 2012 ஐபிஎல் தொடரில் 59 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.

பொருளாதாரச் செய்திகள்

வாகன உதிரி பாகங்களில் போஷ்-டிஎஸ்எஃப் கூட்டணி

போஷ் நிறுவனமும் டிஎஸ்எஃப் குழுமமான வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனங்களும் இணைந்து வணிக வாகனங்களுக்கான நவீன மின்னணு காற்று அமைப்புகள் தயாரிக்கும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டு முயற்சியில் இரு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். இக்கூட்டணியின் மூலம் தயாரிக்கப்படும் வாகன உதிரி பாகங்கள் உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த கூட்டணி மின்னணு காற்று அமைப்புகள், பிரேக்கிங் வசதிகள் மற்றும் சஸ்பென்ஷன் தொழில்நுட்பங்கள் தொடர்பான மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்தும். போஷ் நிறுவனம் மின்னணுவியல் மற்றும் மென்பொருள் நிபுணத்துவத்தை வழங்கவுள்ளது. டிஎஸ்எஃப் குழுமம் உற்பத்தித் திறன் மற்றும் இயந்திர வடிவமைப்பு திறன்களை வழங்கவுள்ளது. வீல்ஸ் இந்தியா தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், இந்தியாவில் பேருந்துகளுக்கான ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகளில் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

சர்வதேச புக்கர் பரிசு 2026 பெற்ற ‘தாய்வான் டிராவலாக்’

தைவான் எழுத்தாளர் யாங் ஷுவாங்-ஜி மற்றும் மொழிபெயர்ப்பாளர் லின் கிங், “தாய்வான் டிராவலாக்” என்ற வரலாற்று நாவலுக்காக சர்வதேச புக்கர் பரிசு 2026-ஐ வென்றனர். 1930-களில் ஜப்பானியர் ஆக்கிரமித்த தாய்வான் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் மாண்டரின் சீன மொழி நாவலாக இந்த விருதை பெற்றுள்ளது. இந்த விருது லண்டனில் உள்ள டேட் மாடர்ன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடுவர் குழுத் தலைவர் நடாஷா பிரவுன் மூலம் அறிவிக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு அசல் மொழியில் வெளியான இந்த நூல், யாங் ஷுவாங்-ஜியின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாகும். இந்த விருதுக்கான £50,000 பரிசுத் தொகையை யாங் ஷுவாங்-ஜி மற்றும் லின் கிங் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், “And Other Stories” என்ற சுயாதீன பதிப்பகம், கடந்த ஆண்டு “Heart Lamp” நூலுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருதைப் பெற்றுள்ளது.

லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக சௌமியா சுவாமிநாதன் தேர்வு

உலகப் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் மகளான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், உலகின் பழமையான அறிவியல் அகாதமிகளில் ஒன்றான லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தலைமை விஞ்ஞானியாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உலக மக்களுக்கு அறிவியல் ரீதியான வழிகாட்டுதலை வழங்கியவர். இவரது அறிவியல், பொது சுகாதாரம் மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை துறைகளுக்கான பங்களிப்பை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மு. வீரபாண்டியன் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

TNPSC தேர்வில் முன்னிலை பெற தினசரி பொது அறிவு ஒரே App-ல்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-05-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20-05-2026

சமகால இணைப்புகள்